மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். நல்ல புத்தகங்களே நல்ல நண்பன் ...
எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து
கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள
நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத்
துணை நிற்பவை நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம்
என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை.
முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு
அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை
தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
முன்னோர் தம் அறிவையும் அனுபவத்தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள்
தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு
போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். “உன்னிடம்
எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே
புத்தகங்கள்” என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ. ஆயிரமாயிரம் மலர்களின்
மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே
புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல. அவை உண்மைகளின்
ஊற்றுக்ண். புத்துலகு நோக்கி மனிதனை வழி நடத்துபவை. புத்தகத்தைத்
திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறான்.
சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிற கருத்து
மணிகளை உள்ளடக்கியிருக்கிற நூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல
நண்பர்களைப் பெறுதல் அரிது. நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட
நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல
நண்பர்கள் புத்தகங்களே. “நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக்கிற
என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களே” என்றார் கவிஞர்
ராபர்ட் கதே.
“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார்
பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும்
எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த
நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப்
பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும். “காட்டுமிராண்டித்தனமான
நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்ற
பேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு.
நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக்
குளியலுக்குள்ளானதும், புத்தகங்களின்பால் அச்சம் கொண்டவர்களை அடையாளம்
காட்டும் நிகழ்ச்சிகளாகும். படையெடுப்பின் போது நூல்களை மதித்துப்
பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர்
முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த
அக்பர் எழுதப்படிக்க தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக்
கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோராகவும்
விளங்கினார்.
நூல் படிக்கும் பழக்கம்
பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப்
பார்த்து, “புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு
என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக்
கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்?
என்று கேட்டால் “அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார்
இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை
என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப்
படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த
வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர்
என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும்
பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிற நல்ல
பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்ற சிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப்
பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். “மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும்,
புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர்
அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப்
படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக்
கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய
புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல,
அது ஒரு தொடர்கதை. கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே
இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக்
கயிற்றைஅவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். இலண்டன்
நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான்
பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.
நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது
புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா
புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக
அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த
சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை
என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி
இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி
வைக்கச் சொன்னாராம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத்
இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி
நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச்
செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த
ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது. இரஷ்ய நாடு
இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட
ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர்
இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்றவள்ளுவர்
குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.
இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள்
வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள்
சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து
மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள்
வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும்
என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது.
ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே
படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக
ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு.
சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் புத்தக
வாசிப்பு பெருந்துணையாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல்
ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை
வாசிப்பு வழங்கும்.
வாங்கிப்படி
எட்டையபுரம் மகாராஜாவுடன் சென்னை சென்ற பாரதியார், “செல்லம்மா! வரும்போது
உனக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லிச்
சென்றவர் மகாராஜா கொடுத்த பணத்தில் மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வாங்கி
வந்து விட்டார். கோபமாய்ப் பார்த்த மனைவியிடம், “செல்லம்மா! அழியும்
பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தைக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி
சமாதானம் செய்தாராம்.
நம்மவர்க்கு நூல்களை விலைபோட்டு வாங்கிப் படிக்கிற பழக்கம் மிகமிகக்
குறைவு. படிப்பவர்களிலும் இரவல் வாங்கிப் படிப்பவர்களே மிகுதி. அப்படி
இரவல் வாங்கிச் செல்கிற பலர் நூல்களைத் திருப்பித் தருவதே இல்லை. ஒருமுறை
ஆங்கில நாடக நூலாசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் பேசும்போது “புத்தகங்களை
இரவலாக வாங்கிச் செல்வோரில் சிலர் திருப்பித் தருவதே இல்லை. என்னிடம் பெரிய
நூலகமே உள்ளது. அதில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அப்படி வந்தவையே”
என்றாராம். தாங்கள் வாங்கிய நூலை மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே
என்கிற தாராள மனம் கொண்டவர்கள் கூட, நாணயமற்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால்
எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறவர்கள் இரவல் கேட்கும் போது மறுக்க
வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அப்படியே நூல்களை இரவல்
வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தாலும் அது உருக்குலைந்து கிழிந்து
அழுக்காகி வந்து சேரும்.
“பொன்னள்ளித் தந்தாலும் தருவேன் அன்றி புத்தகத்தை நானிரவல் தரவே மாட்டேன்!
கன்னியரை புத்தகத்தை இரவல் தந்தால் கசங்காமல் வீடுவந்து சேர்வதில்லை!”
என்பார் கவிஞர் சுரதா. இதற்கு மாறான சில நிகழ்வுகளும் உண்டு.
கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளைப் பிரிப்பதற்காக நெடுஞ்சுவர் ஒன்று எழுப்பப்
பட்டது. இதனால் மேற்கு பெர்லின் அமெரிக்கன் மெமோரியல் நூலகத்திலிருந்து
புத்தகங்கள் எடுத்துச் சென்ற ஒரு கிழக்கு ஜெர்மன் வாசகரால் அவற்றைத்
திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இருபத்தொன்பது ஆண்டுகளுக்குப்
பிறகு அந்த நெடுஞ்சுவர் இடிக்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைக்கப் பெற்றதைத்
தொடர்ந்து அந்த வாசகர் புத்தகங்களைப் பத்திரமாகத் திரும்ப ஒப்படைத்தாராம்.
இதில் பின்னவரைப் பின்பற்ற முயல்வோம். இரவல் பெற்றதைத் திருப்பித் தருவதன்
மூலம் நட்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வோம். சிறந்த புத்தகம் என்பது
அதன் வடிவமைப்பிலோ தாளின் தரத்திலோ, அட்டையின் அழகிலோ இல்லை. வாசிப்பவரது
மனதில் அது உண்டாக்கும் தாக்கத்தில் மறைந்திருக்கிறது. எனவே சிறந்த
நூல்களுக்குச் செலவிடுவது செலவே அல்ல. அது சேமிப்பு. சேமிப்பு எதற்கு? தேவை
வரும் போது பயன்படுத்தத்தான். இடுக்கண் வருங்கால் உடுக்கை இழந்தவன் கை போல
ஓடி வந்து உற்ற துணையாக, வழி காட்டியாக இருப்பவை நூல்களே. நமக்கு
மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கும் உங்களது சந்ததியர்க்கும் அது வழி
காட்டும், வாழ்வில் ஒளி காட்டும். முன்பெல்லாம் தங்களுக்குப் படிக்கத்
தெரியவில்லை என்றாலும் புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துப்
பாதுகாப்பார்களாம். ஏன் தெரியுமா? தமது சந்ததியர்க்கு அவை பயன்படுமே
என்றுதான். “புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியாது உப்பத்து அகமே
வைப்பர்” என்கிறது ஒரு பழம்பாடல்.
நூல்களை அரிய செல்வமாகப் பல நாட்டினரும் மதித்துப் போற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண்போம்.
சீன நாட்டிலிருந்து வந்த யுவான் சுவாங் என்னும் அறிஞர் நாளந்தாப்
பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின் சில காலம் அங்கேயே பேராசிரியராகவும்
இருந்தார். பின் தாயகம் திரும்பி, புத்தமதப் பிரச்சாரம் செய்ய
விரும்பினார். அதற்காகச் சில அறநூல்களையும் தம்முடன் எடுத்துச் சென்றார்.
மாணவர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று
கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று
அனைவரும் அஞ்சினர். யுவான் சுவாங் தாம் கற்றவையனைத்தும், கொண்டு செல்ல
நினைத்தவைனைத்தும் பயனற்றதாகிவிடுமோ என்று முகம் வாடினார். அதுகண்ட
மாணவர்கள் பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என நினைந்து
அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதனையும் நினைத்து ஆற்றில்
குதித்து விட்டனர். அது அவர்களைத் தனதாக்கிக் கொண்டது. யுவான் சுவாங்கும்
அறிவு நூல்களோடு இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் சுமந்து கொண்டு
கரைசேர்ந்தார். இதயத்தைத் தொடும் நிகழ்ச்சி மட்டுமன்று இது. இமயத்தை
எட்டும் உயரிய நிகழ்ச்சியும் இது எனலாம்.
கி.பி. 23-74 இல் வாழ்ந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த “பிளினி” என்பவர் தம்
நூலில் குறிப்பிடும் ஒரு செய்தி, “அரசர் டாரியஸ் மீது அலெக்ஸாந்தர்
படையெடுத்துச் சென்று அவரைத் தோல்வி பெறச் செய்தபோது, அப்போர்க் களத்தில்
வீரர் ஒருவர் உடலுக்கடியில் பொன்னால் செய்த கூடையொன்றில் நவரத்தினங்கள்
பலவும் மலர்களும் திணித்து மற்றும் நறுமணப் பொருள்களும் நிரப்பி
வைத்திருப்பதைக் கண்டார். அவ்வரிய கூடையின் பயனைப் பற்றி அலெக்ஸாந்தரின்
வீரர்கள் பலர் பலவிதமாக எடுத்துக் கூறினர். ஆயினும் அவர்கள் கூறுவதைக்
கவனமாகக் கேட்டுவிட்டு “இருப்பினும் கடவுள் ஹெர்குலிஸ் சாட்சியாகக்
கூறுகிறேன். இக்கூடை ஹோமர் அவர்களுடைய காவியத்தை வைத்துப் பாதுகாக்க
மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று ஆணையிட்டார். இதனாலும் நூல்கள்
எந்த அளவு போற்றிக் காக்கப்பட்டன என்பதை அறிகிறோம்.
எது சிறந்த புத்தகம்?
பாட நூல்களைப் படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது.
ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக்
கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள். அந்த நற்குணங்களை
நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே. படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும்
வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ,
அதுவே சிறந்த புத்தகம். பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு இட்டு
வைக்கக்கூடிய அற்புத வரிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற புத்தகம் எதுவோ அதுவே
சிறந்த புத்தகம். ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத்
தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.
தூங்கச் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப் புரட்டுகிறபோது எந்தப்
புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடுகிறதோ, சொக்க வைக்கும்
தூக்கத்தில் படிக்கும் போதும் எந்த நூல் ஒருவனை விழிப்படையச் செய்கிறதோ
அதுவே சிறந்த புத்தகம். நல்ல நூல்களைப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட
அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரமாகும்.
புற்றீசல் போல புதுப்புது நூல்களும் பத்திரிகைகளும் தினந்தினம் வெளி வந்து
கொண்டிருக்கின்றன. அவற்றுள் நமது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும்
முயற்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வேண்டியவை எவையெவை என்று
தேர்ந்தெடுத்து உப்புச் சப்பில்லாத குப்பைகளை ஒதுக்கி விடுகிறதெளிவு
வேண்டும். நல்ல நூல்களை மட்டும் வாங்கிப்படிக்க வேண்டும்.
நூலகங்கள்
உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள்
என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி
அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார்.
வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட
கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான
செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து
விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக்
கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப்
படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால்
புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து
படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில்,
படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும்
படிக்கலாம்.
தமது துறைநூல்கள்
உங்கள் துறையில் சிறந்து விளங்க என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும்
என்பதைப் பட்டியலிடுங்கள். சில நூல்களைச் சொந்தமாகவும், வாங்கி வைத்திருக்க
வேண்டும். மேலும் எந்த துறையில் சிறப்புப் பெற விரும்புகிறோமோ அல்லது
வருங்காலத்தில் தொழில் தொடங்க உள்ள அல்லது பணியாற்ற உள்ள அல்லது போட்டித்
தேர்வு எழுத உள்ள பாடம் எது எனத் தீர்மானித்து விட்டாலோ அந்தப் பாடத்தில்
உள்ள வேறு சில சிறந்த நூல்களையும் படிக்க வேண்டும்.
நாம் சேர்ந்துள்ள துறையில் உள்ள நூல் களைப் படிப்பதால் துறையறிவு பெருகும்,
தெளிவு பிறக்கும், தன்னம்பிக்கை வளரும், ஆய்வுக்குரிய இடைவெளிகளை அடையாளங்
காண முடியும். சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால்
அவரிடம் போய்க் கேளுங்கள் என்று பலரும் சொல்லக் கூடிய நிலை வரும்.
பணியாற்றும் துறையில் அறிவு ஜீவியாக, விவரமறிந்தவராக விளங்குவதே உயர்ந்த
நிலைதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிற
அங்கீகாரங்களும் அவர்களைத் தேடி வரும்.
வாழ்வை முன்னேற்றும் வளமான நூல்கள்
மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படிப்பது நம்மைச் சரியான வழியில்
நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக்
கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய
விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின்
வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளைத்
தகர்த்தெறிய கடைப் பிடித்த அணுகு முறைகளை நமக்குப் படிகளாக்கிக் கொள்ளவும்,
அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை
துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனை சாதனையாளனாக்க
வழிகாட்டுகிறசுயமுன்னேற்றநூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும்.
நெப்போலியன் கில், நார்மன் வின்சென்ட் பேல், டேல் கார்னகி, ஜேம்ஸ் கேலன்,
டி எட்வர்டு போனோ, ராபர்ட் ஆண்டனி போன்ற ஆங்கில எழுத்தாளர்களின்
சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம் வளர்ச்சிக்கு படிக்கல்லாகும்.
இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின் நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும்
ஏற்ப எழுதப்பட்டிருப்பினும் அடிப்படையான உண்மைகள் நமக்கும் ஏற்றதே.
தமிழில் வந்துள்ள தன்னம்பிக்கையை வளர்க்கும் தரமான நூல்கள் இதோ.
1. அப்துற்றகீமின் “வாழ்க்கையில் வெற்றி”
2. அகிலனின் “வாழ்க்கையில் வெற்றி”
3. வ.உ.சி.யின் “மனம் போல் வாழ்வு”
4. மு. வரதராசனாரின் “நல்வாழ்வு”
5. விடுதலை கி. வீரமணியின் “வாழ்வியல் கட்டுரைகள்”
6. இல.செ. கந்தசாமியின் “முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்”
7. எம்.எஸ். உதயமூர்த்தியின் “எண்ணங்கள்”
8. பி.சி. கணேசனின் “உங்களால் முடியும்”
9. மெர்வினின் “வாழ்க்கை உன் கையில்”
10. பெரு. மதியழகனின் “நினைவாற்றல் மேம்பட வழி”
ஆகியவை படிக்கப் படிக்க உங்களை வெற்றிக்கு ஆற்றுப்படுத்தும் ஆற்றல் படைத்தவை.
இங்கே குறித்துள்ள நூல்கள் சிலதான். இன்னும் ஏராளமான சிறந்த நூல்களை
நீங்கள் படிக்க வேண்டும். குறைந்தது இவற்றையாவது படிப்பது போட்டிகள்
நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள உதவும்.
படிப்பதும் தியானமே
புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை
மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கிறநிலை
நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். என்னைப் பொறுத்த வரை
புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை
அவ்வப்போது அனுபவிக்கிறேன். ஆழ்ந்து படிக்கிற அத்தனைப் பேருக்கும் இத்தகு
அனுபவம் இருக்கும். இதுவும் ஒரு வகைத் தியானம் என்பதில் தவறேதுமில்லை.
புத்தகப் பிரியர்களுக்கு நெஞ்சம் கவர்ந்த நூல்கள் கிடைத்து விட்டால்
போதும், எதைப் பற்றியும் இலட்சியம் செய்யாமல் வாசித்துக் கொண்டே
இருப்பார்கள். பேருந்துகளில், தொடர் வண்டிகளில், பூங்காவின் இருக்கைகளில்
இப்படி அமர்ந்து படிக்க இடம் கிடைக்கும் இட மெங்கும் வாசித்துக்
கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடியும். வாசிக்கிறசுகம் அவர்களை ஆனந்தத்தின்
எல்லைக்கு அழைத்துச் சென்று விடும். சிலர் வீட்டிற்குச் சென்றால்
கழிப்பறையில் கூட புத்தகம் இருக்கும். புத்தகத்தை சரஸ்வதியாக்கி
பூசையறையில் வைத்து வாசிக்காமல், பூசை போடுவதை விட நேசிக்கிற புத்தகத்தைக்
கழிப்பறையில் வாசிப்பதில் ஒன்றும் குற்றமில்லை. அது வாசிக்கப்படுகிறதா?
என்பது தான் முக்கியம். எங்கே வாசிக்கப்படுகிறது என்பதன்று.
டாக்டர். பெரு. மதியழகன்