செவ்வாய், 10 நவம்பர், 2015

கணக்குனாலே கடுக்காயா கசக்குதா மாணவர்களே ? இதற்கு காரணம் நீங்கள் அல்ல. கணக்கு பாடம் கற்பிக்கும் உங்கள் ஆசிரியர் தான் என்கிறார் கோவையைச் சேர்ந்த கணித ஆசிரியர் உமா தாணு . இன்றைய பள்ளி ஆசிரியர்கள் கணித பாடத்தை முறையாக கற்பிப்பதில்லை என ஆதங்கப் படும் இவர்,  கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் 

 
வசதி படைத்தோர் "அபாகாஸ்" பயிற்சி வகுப்பிற்கு சென்று தங்களது கணித திறனை மேம்படுத்திக் கொள்கின்றனர். வசதி இல்லாத ஏழை மாணவனும் கணக்கில் புலியாக வேண்டும் என்னும் நோக்கத்திலையே எனது சேவையை தொடங்கியுள்ளேன் என்கிறார். உமா தாணு. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த இந்தியரான, ஆரியப்பட்டர் இல்லாவிட்டால் இன்று கணித எண்களே முடிவில்லா நிலைக்கு சென்றிருக்காது.
ஓய்வு பெற்ற கணக்கு ஆசிரியரான உமா தாணு, 'மனிதநேய பேரவை' எனும் அமைப்பின் பொதுச் செயலராக இருந்து, சமுதாய சேவைகள் புரிந்து வருகிறார். தனது 35 ஆண்டு கால அனுபவத்தை வீணாக்காமல், கணித பாடங்களை கற்பிக்க உதவும் சில எளிய வழிமுறைகளை வடிவமைத்துள்ளார்.
இது குறித்து உமா தாணு கூறியதாவது :
ஆறாம் வகுப்பில் இருந்து 'ஜியாமெட்ரிக் பாக்ஸ்' பயன்படுத்தும் நம் தமிழக மாணவர்களுக்கு set square( மூலை மட்டங்கள் ) எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை.  ஏனென்றால், இது குறித்து ஆசிரியர்கள் விளக்குவதில்லை. இந்த மூலை மட்டங்களை  பயன்படுத்தி, நுணுக்கமான பல கோணங்களை (Angle) அமைப்பது எப்படி என்பதை ஆய்வு செய்து தீர்வு கண்டுள்ளேன்.
இங்ஜினியரிங், பாலி டெக்னிக் படிப்புகளில் சேரும் போது மூலை மட்டங்களின் உபயோகத்தை தவிர்க்க முடியாது. பள்ளியில் இது குறித்து எதுவுமே தெரியாத மாணவர்கள், கல்லூரியில்தான் முதல் முறையாக தெரிந்து கொள்கின்றனர். இதை பள்ளி படிப்பின் போதே தெரிந்து கொண்டு விட்டால் கணிதம் எளிதாகி விடும் அல்லவா?
உருளை (Cylinder), கூம்பு (cone), கோளம்(Sphere) ஆகியவற்றின் காண அளவு, வளைபரப்பு, மொத்தப்பரப்பு ஆகியவற்றை கணக்கிட பயன்படும் சூத்திரங்களை எளிதாக புரிந்து கொள்ள வசதியாக, குறைந்த செலவில் சில உபகரணங்களை கண்டு பிடித்துள்ளேன்.
இதை உருவாக்க வெறும் , 10 ரூபாய் போதும். இதை பயன்படுத்தி படித்தால்,
சூத்திரங்களை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. இந்த உபகரணங்களை  மணக்கணக்கில் கொண்டு வந்தாலே, சூத்திரம் நினைவுக்கு வந்துவிடும்.
அல்ஜீப்ரா பகுதியில் இருபடி கோவைகளை காரணிப்படுத்துதல், கணித பாடத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதி , ஒன்பதாம் வகுப்பில் காரணிப்படுத்துதல் பாடம் துவங்குகிறது. எவ்வளவு பெரிய எண்ணாக இருந்தாலும், அதன் காரணிகளை கண்டுபிடிக்க சுலபமான முறையை உருவாக்கியுள்ளேன்.
உதாரணத்திற்கு, இரு எண்களின் பெருக்குத் தொகை  4032 ம் கூட்டுத் தொகை, 16 ம் இருந்தால், இதன் காரணிகள் எவை? என்ற கேள்வி தேர்வில் கேட்கப்பட்டால் , தற்போது கற்றுத் தரப்படும் முறையின்படி விடையளிக்க அதிக  நேரம் தேவை.
அதற்கு பதிலாக, மிகச் சிறிய எண்ணால் ஒரு பக்கம் வகுத்தும், அடுத்த பக்கம் பெருக்கியும் வந்தால் , இரண்டே நிமிடத்தில் விடை கிடைத்து விடும். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காரணிகளை எளிதாக கண்டுபிடிக்கும் இந்த முறையை தெரிந்து கொண்டால், சமச்சீர் கல்வி கணித பாடத்தை மட்டுமல்ல, வேலைக்கான போட்டித் தேர்வுகளையும்   எளிதாக கையாள முடியும்.
தான் கண்டுபிடித்த எளிய கணித உத்தியை  தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி மாவட்டங்களிலும் ஒரு நாள் வகுப்பு ஏற்பாடு செய்து பட்டதாரி கணித ஆசிரியர்களுக்கு கருத்தாளராக இருந்து பயிற்சி அளிக்க விரும்பிய உமா தாணுவின் கோரிக்கையை ஏற்ற  கோவை அரசு அத்திட்டத்தை  கோவையில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கற்றுத் தருகிறது.
இந்த கணித முறையை அனைத்து தமிழக மாவட்டங்களையும் சென்றடைய தமிழக முதல்வர் அனுமதித்தால்  மானவர்களின் கணித திறன் மேம்படும்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக