புதன், 25 நவம்பர், 2015

முன்கூட்டியே திட்டமிடல்....

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம். சரியான திட்டமிடலும் அதற்கான செயல்பாடுகளுமே வெற்றிக்கு வழி......

         முன்னொரு காலத்தில் அந்த நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். அரண்மனைக்குச் சென்று 'எனக்கு அரசர் பதவி வேண்டும்' என்று கேட்டால் போதும், அரியணையில் அமர்த்தி முடிசூட்டிவிடுவார்கள். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த
நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் மக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும்
புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

மேற்கண்ட கதையை கவனியுங்கள்!

''ஐந்து ஆண்டுக்குப் பிறகு காடும் சாவும்தான் விதி'' என்ற விதியை மதியால் எப்படி மாற்றினான்?

வறுமையும், நோயும், மன உளைச்சலும், அவமதிப்பும்தான் நம்முடைய விதியா?

பசி, பிணி, மூப்பு, சாக்காடுதான் தலையெழுத்தா? எப்படியும் மரணம்தான் என்பது ஆண்டி முதல் அரசன் வரை அனைவருக்கும் வகுக்கப்பட்ட விதியாக இருந்தாலும், இறுதிக் காலத்தை ஏன் இறுகிப்போன காலமாகக் கழிக்க வேண்டும்?

அதற்காகத் துல்லியமாகத் திட்டமிடுங்கள்.

எப்போது செய்ய வேண்டும் என்று அழகாகத் திட்டமிடுங்கள்.


 =================================================================

      முன்னொரு காலத்தில் ஒரு நாட்டில் வாழ்ந்த மக்கள் விசித்திரமான ஒரு பாரம்பரியச் சடங்கைப் பின்பற்றி வந்தனர். அதன்படி ஒவ்வொரு அரசரும் அந்த நாட்டை ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஆள வேண்டும். ஐந்தாமாண்டின் முடிவில் அந்த அரசருக்குச் சகல மரியாதைகளும் செய்து அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி ஊருக்கு வெளியே ஒரு நதிக்கு மறுபுறம் இருக்கும் ஒரு அடர்ந்த காட்டினுள் கொண்டு போய் விட்டு விடுவார்கள். அதன் பின்னர் அந்த அரசர் மறுபடி நாட்டுக்குள் வர அனுமதிக்கப் படமாட்டார். ஒரிரு நாட்களில் காட்டில் வாழும் கொடிய மிருகங்கள் அந்த அரசரை அடித்து சாப்பிட்டு விடும். அதாவது ஒவ்வொரு அரசரும் அவரது ஆட்சிகாலத்திற்குப் பிறகு மரணிக்க வேண்டும் என்பதையே பாரம்பரியமாகக் கொண்டிருந்தனர். மக்கள் பல வருடங்களாக இந்த சடங்கையே பின்பற்றி வந்தனர். ஒவ்வொரு அரசரும் அதன்படியே நடத்தப்பட்டனர்.
சில அரசர்கள் ஐந்து வருடமும் நாட்டை மகிழ்ச்சியுடன் ஆண்டு விட்டுப் பின்னர் அந்த சடங்கை ஏற்று, மக்களுக்காக உயிரை விடுவதில் பெருமை கொண்டு மாண்டு வந்தனர். இன்னும் சில அரசர்கள் ஐந்து ஆண்டு முடிவதற்குள்ளாகவே,  மரண பயத்திலேயே உயிரை விட்டனர்.
இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் ஒரு அரசர் வெற்றிகரமாக தனது ஐந்தாண்டு ஆட்சிகாலத்தை முடித்தார். மக்கள் அனைவரும் கூடி அவருக்கு மரியாதை செய்து, அவரை ஒரு பல்லக்கில் ஏற்றி நதியின் அக்கரைக்கு அனுப்பி வைத்தனர். பல்லக்கைத் தூக்கிச் செல்லும் காவலாளிகள் அரசரை நதிக்கரையில் இறக்கி விட்டுவிட்டு “அரசரே.. நாங்கள் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?” என்றனர்
“ஹ்ம்ம் கேளுங்கள் “ என்றார் அரசர்.
“நாங்கள் இதுவரை பல மன்னர்களை இங்கே இறக்கிவிட வந்திருக்கின்றோம். எவ்வளவு தான் மக்களுக்காக உயிரை விடுவதில் அவர்கள் பெருமையாகக் கருதினாலும் இங்கே நாங்கள் கொண்டு வந்து விடும் அந்த கணத்திலாவது அவர்கள் முகத்தில் ஒரு பயம் தெரியும். ஆனால் தங்கள் முகத்தில் அந்த மாதிரி ஒரு உணர்வை எங்களால் காண முடியவில்லையே ஏன்? உங்களுக்கு சாவென்றால் பயம் கிடையாதா?” என்றான் ஒரு காவலாளி.
”சாவென்றால் யாருக்குத் தான் பயம் இருக்காது. எனக்கும் சாவென்றால் பயம்தான்” என்றார் அரசர்.
”அப்படியா.. எப்படியோ இன்னும் சில மணி நேரங்களில் எதோ ஒரு காட்டு விலங்கிற்கு இரையாகி இறக்கப் போகின்றீர்கள். ஆனால் தாங்கள் அதற்காகப் பயப்படுவது போல் தெரியவில்லையே” என்றான் மற்றொரு காவலாளி.
”நான் சாகப்போகின்றேன் என்பது உண்மை.. ஆனால் அது இன்றைக்கு அல்ல” என்றார் அரசர்.
“புரியவில்லையே மன்னா… அது எப்படி சாத்தியம். இந்தக் காட்டில் இருக்கும் கொடிய மிருகங்களைப் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். பல முறை பார்த்தும் இருக்கிறோம். இந்தக் காட்டில் ஒரு இரவைத் தாண்டினாலே பெரிய விஷயம்.. அப்படியிருக்கையில்….” என காவலாளி இழுக்க மன்னர் தெளிவாகப் பதில் கூற ஆரம்பித்தார்.
”காவலாளிகளே.. மற்ற அரசரைப்போல நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோதே ஐந்தாவது ஆண்டில் இவ்வாறு நடக்கப் போகின்றது என்பதை அறிந்திருந்தேன். ஆனால் நான் மற்றவர்களைப் போல எதுவும் செய்யாமல் விதியை நினைத்துப் புலம்பவில்லை. நான் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே சில வீரர்களைக் காட்டுக்குள் அனுப்பி, இங்கு வாழும் கொடிய மிருகங்கள் அனைத்தையும் கொன்று விட்டேன். இரண்டாம் வருடத்தில் மரம் வெட்டும் சிலரைக் காட்டுக்குள் அனுப்பி, ஒரு பகுதி மரங்களை வெட்டச் செய்தேன். மூன்றாம் வருடத்தில்  சில விவசாயிகளை உள்ளே அனுப்பி அதன் ஒரு பகுதியை விளைநிலங்களாக்கி பயிர்களை வளர்க்கச் செய்தேன். நான்காம் வருடத்தில் வீடு கட்டுபவர்கள் சிலரை அனுப்பி காட்டுக்குள் வீடுகள் அமைக்கச் செய்தேன். ஐந்தாம் வருடம் என் நாட்டின் ஒரு பகுதி மக்களை இந்த காட்டுக்குள் இடம் பெயரச் செய்துவிட்டேன்.
இப்போது நான் சாதாரணமானவானக இந்த காட்டுக்குள் செல்லவில்லை. நான் உருவாக்கிய சாம்ராஜ்ஜியத்தில் ராஜாவாகவே செல்கிறேன். என்னை வரவேற்க உள்ளே என் மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்” என கூறி முடிக்கவும் ஆச்சர்யத்திலிருந்து மீளாத காவலாளிகள்
”மன்னா இதற்குப் பெயர் என்ன?” என்று கேட்டவுடன் மன்னர் ஒரு  புன்னகையை உதிர்த்துவிட்டு
“காவளாளிகளே… இதற்குப் பெயர்தான் திட்டம்” என்று கூறிவிட்டு அந்தப் புன்னகை மாறாத முகத்துடன் காட்டிற்குள் சென்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக